Wednesday, January 8, 2025

சோற்றுக்கடைபுராணம் தொடர் - ft. சத்யா டீ ஸ்டால்

 


ஒரு டீக்கடை சோற்றுக்கடை ஆகுமா? புராணத்தில் இடம் பெறுமளவிற்கு என்ன சிறப்பு?

சேரன்மகாதேவியில் பாபநாசம் சாலையில் அமைந்துள்ள ஒரு கீற்றுக் கொட்டகையில் அமைந்துள்ள சிறு தேநீர் நிலையம். இந்தக் கடையைக் குறித்து நான் இவ்வழி செல்லும் எங்கள் உறவினர்கள் , நண்பர்கள் எனப் பலரிடமும் கூறியுள்ளேன்.

மதியம் 1:30க்கு இங்கு சென்றால் அன்றன்று செய்யப்பட்ட மிகவும் மிருதுவான பன் வகைகள் கிடைக்கும்.

இதற்கு எங்கள் வீட்டிலும் சுற்றத்திலும் அடிமைகள் பலருண்டு. இந்தக் கடையைக் கண்டெடுத்த கதை வேறுண்டு, மதியம் 1:30க்கு சேரன்மகாதேவியில் சூடான கேரட் அல்வா கிடைக்கும் என்று சென்ற வழியில் கண்டெடுத்த தனி முத்து தான் சத்யா டீ ஸ்டால். இங்குள்ள தேங்காய் துருவல் சேர்த்து தரும் பட்டர் பன் தனிச்சுவை உடையது, மிகச் சிறிய அளவில் மட்டுமே செய்யப்படுவதால் சீக்கிரம் தீர்ந்து விடும். அதனால் நேரத்துக்கு செல்லும் வழக்கமும் உண்டு. 

தேடிப்போன கேரட் அல்வாவை சூடாக சுவைக்க இதே நேரத்தில் இவர்கள் கடைக்கு எதிரில் இருக்கும் சத்யா ஸ்வீட் ஸ்டாலில் வாங்கிக் கொள்ளலாம்! சுவைமிகு உணவு, அது சமயம் தரமான ஒன்றுங்கூட....


- கோமதி சங்கர் சுந்தரம் 

Tuesday, December 24, 2024

சோற்றுக்கடைபுராணம் தொடர் - ft. இராமன் கடை

 


திருநெல்வேலி நகரம் வாசிகள் பலருக்கும் செவிக்கும் வயிற்றுக்கும் உணவு ஈந்த சிறு சோற்றுக்கடை! இன்றைக்கு நெல்லையின் முதலாளிகள் மற்றும் முன்னாள் முதலாளிகள் பலர் தங்களது தொழிலாளர்களோடு சமமாய் உண்ட உணவகம்! 


சிறு கடை இது, கீழப்புதுத் தெருவில் இருந்தது, இராமன் மாமா என்று நாங்கள் அழைக்கும் மாதாவே நளபாகம்! காலை பூரி, இட்லி, வடை, கிழங்கு, கல் தோசை என கடை அனலாய் இருக்கும்! வாங்க மருமகனே என்று என்னை இன்றும் வாஞ்சையோடு அழைக்கும் இராமன் மாமாவின் காஃபி என் நாவில் இதை எழுதும் போது கூட மணக்கிறது!


மதியம் குழைவான சித்ரான்னங்கள், இரவு மீண்டும் இட்லி தோசை என்று கடை முழுவதும் இயங்கும்!


இந்தக் கடையின் வடை தனி மணம் மிக்கது, பொறியில் எலி மாட்டாத போது வீட்டில் எடுக்கப்படும் பிரம்மாஸ்திரம் இராமன் கடை வடை தான்! அந்த மணத்திற்கு எலி அன்றே மாட்டிவிடும்! அதே வடை தான் அன்று எங்களுக்கு மோர்க்குழம்புக்கோ தயிர்சாதத்திற்கோ! பின்னே எலிக்கு மட்டும் வடை வாங்கிட்டு வந்தா வடையை நாங்களே காலி செய்து விடுவோம் என்ற அச்சந்தான்!


அன்போடு சுடச்சுட இராமன் மாமா கையை உதறி உதறி எனக்கு பரிமாறிய இட்லிக்கும், பூரிக்கும் நாம் என்றுமே அடிமை தான்!


இந்தக் கடையில் தான் எங்கள் வார்டின் தலைவிதியே இருக்கும் அன்று என்றால் மிகையல்ல, முன்னாள் இந்நாள் மாமன்ற உறுப்பினர்கள், கழகங்களின் பேச்சாளர்கள், ஸ்தாபன முதலாளிகள் எனப் பலருக்கும் இராமன் கடையே தஞ்சம்! இங்கு தேர்தல் முடிவுகளை முன்னரே நாங்கள் அறிந்துகொள்வோம் அன்று! 


இன்று அவ்வாறு கடைகள் உங்கள் பக்கம் உள்ளதா? ஏனெனில் இராமன் கடையும் இன்றில்லை மக்கள் மனமறிந்து இயங்கும் மாமன்ற உறுப்பினர்களுமில்லை....

Monday, December 2, 2024

அமெரிக்காவின் பொருளாதார சர்வாதிகாரம் - பார்கவன் சோழன்



டாலர் அல்லாத வேறு நாணயத்தை பயன்படுத்தினால் 100 % வரி விதிப்பேன் என இந்தியா, சீனா, ரஷ்யாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார் டிரம்ப்.  


உலக பொருளாதார தலைமையிடமாக அமெரிக்க மட்டுமே இயங்க வேண்டும் என்பதில் தொடங்குகிறது உலக அரசியல்.

சீனா பல்வேறு முயற்சிகளில் அமெரிக்காவுடன் போட்டியிட்டு வருகிறது. உலக பொருளாதார தலைநகரம் நியூயார்க்கா அல்லது பெய்ஜிங்கா என்பது இங்கு பிரதான அரசியல். 

மக்கள் தொகையிலும் வலிமையிலும் பொருளாதாரத்திலும் ஆசியா தான் முதன்மையிடம் வகிக்கிறது. 

ஆனால் ஆசியா நாடுகளுக்கிடையே முரண்பாடுகளை உருவாக்கி அதை பயன்படுத்தி தான் உலகின் பொருளாதார தலைமையாக தன்னை நிலை நிறுத்தி வருகிறது அமெரிக்கா.

டிரம்ப் வென்றதை இந்தியர்கள் சிலர் கொண்டாடுவதை காண முடிந்தது. உள்ளூர் தேர்தல் அரசியலில் முழ்கி கிடக்கும் இந்தியர் எவருக்கும் உலக அரசியல் விழிப்புணர்வு கிடையாது. உலகில் நாம் ஆசியர்கள் என்ற புரிதலும் கிடையாது. 

இந்தியா சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகள் அமெரிக்காவின் நுண்ணரசியலை உணர்ந்து உலகில் ஆசியர்கள் என்ற ஒற்றை அடையாளத்தில் இணைந்து அமெரிக்காவின் அரசியலை எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் தேவை. 

இங்கு ஒருவர் பலரையும் கட்டுபடுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் அடிபணிய வைத்து உலகின் தலைமையாக இருப்பது ஆபத்தானது. 

செயற்கை முரண்பாடுகளை உருவாக்குவதில் வல்லவர்கள் அமெரிக்கர்கள். இன, மொழி, மத பிளவு மற்றும் நாடு எல்லை பிரிவுகளில் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மேலோட்டமாக பார்த்தால் நமக்கு எதிரில் நிற்பவன் செய்வது போல் தோன்றும் ஆனால் இதை எல்லாம் மறைமுகமாக மற்றொரு சக்தி அங்கு காய்நகர்த்தி கொண்டிருக்கும். இதெல்லாம் வரப்பு சண்டைக்கு ஒப்பானது தான். 

பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளுடன் நாம் சண்டையிட்டு கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அதேதான் நம்முடன் சீனா, பாகிஸ்தானும் பகைத்து கொள்வதில் எந்த பயனுமில்லை. மாறாக அமெரிக்கா எனும் சர்வாதிகாரத்திற்கு இதன்மூலம் தீணிப்போட்டு கொண்டிருக்கிறோம். 

அமெரிக்காவின் நுண்ணரசியலை ஒவ்வொரு ஆசியர்களும் உணர வேண்டும்.
அமெரிக்கா விசயத்தில் நாம் ஆசியர் என்கிற உணர்வில் செயல்பட்டால் மட்டும்தான் இந்த அரசியலை வெல்ல முடியும்.

இந்தியா சீனா மற்றும் ஏனைய ஆசிய நாடுகள் இணைந்துவிட்டால் அமெரிக்கா எனும் சர்வாதிகாரம் நம்மிடம் பணியும்... 

- பார்கவன் சோழன்

Thursday, November 28, 2024

சோற்றுக்கடைபுராணம் தொடர் - ft. நேஷனல் லாட்ஜ்

 


நாவின் ஆந்திரத் தாகம்!

சென்னைமாநகரின் உணவுப்ப்ரியர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இது! ஆனாலும் நமது விருப்பமான சோற்றுக்கடைகளுல் இதுவும் ஒன்று! 

தேடி உணவு உண்ணும் வழமை உடையவன் தஞ்சையின் நாவுகளுக்கு சொந்தக்காரன் நண்பன் அருமை யோகேஸ்வரன் வள்ளிநாயகம், அவனோடு நாம் இன்னும் பயணித்தால் சோற்றுக்கடை புராணம் பலநூறு கட்டுரைகள் தாண்டும்! சமீபத்தில் எங்கள் நண்பன் மீனாட்சி சங்கர் இல்ல புதுமனை புகுவிழாவிற்கு சென்னை சென்றிருந்தோம்!

 அவ்வமயம் தனது இல்லத்தில் தங்க வேண்டும் என்று அன்புக்கட்டளை யோகேஷிடமிருந்து! என் இல்லாள் மற்றும் மகளோடு சிறப்பாய் அமைந்த அந்த பயண முடிவில் நாங்கள் சுமார் பத்து கிலோ ஏறிவிட்டோம் என்றால் மிகையல்ல.

அசைவ உணவுகள் மீது மிகுந்த ப்ரியமுடைய யோகி எங்களுக்காக சைவ உணவுகளைத் தேடித்தேடி இட்டுச் சென்றது அன்பின் பேரழகு!


சென்னையில் சௌகார்பேட்டை கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் அமைந்துள்ள நேஷனல் லாட்ஜ்க்கு அழைத்துச் சென்றிருக்கிறார் கொடும்பசி விழி முட்டிய வேளையில்! 

வெகுநேர காத்திருப்புக்குப் பின் அருளால் கிட்டிய ஆசனத்தில் அமர்ந்து இருக்க, உணவு நம்மை அணைக்க வந்தது!

நல்ல வாழை இலையில் புளித்தொக்கு, உருளைப் பொறியல், பருப்பு கூட்டு, வலதுப்புற ஓரத்தில் தனக்கான இடம் என அமர்ந்த கோங்குரா சட்னி! பரிமாறும் போதே எப்படி சாப்பிட வேண்டும் என்ற பாடம் எடுத்தனர் திரு.யோகேஷ் மற்றும் மருத்துவர். நந்தினி யோகேஷ் ஆகியோர்! 

பருப்புப்பொடி வந்தது, நெய்க்குளம் வெட்டி சோற்றோடு குழப்பி பருப்பு கூட்டு கலந்து சற்றே கோங்குரா சட்னியைத் (புளித்தக்கீரை) தொட்டு தொண்டைக்குழியில் இறக்கையில் நாவரும்புகள் நன்றி சொல்லியது! கண்கள் பனிக்கப் பணிக்கப்பட்டது! என்னே ருசி!


நெடுங்காலமாக சென்னையில் பலர் ஆந்திரா மெஸ் பற்றிக் கூறியிருந்தாலும் நண்பன் இட்டுச்சென்ற சோற்றுக்கடை ........ இதில் நான் எதையும் நிரப்பவில்லை! உங்கள் கற்பனைக்கே விடுகிறேன்!

அடுத்து வந்த சாம்பார், இரசம், காரக் குழம்பு, மோர்க்குழம்பு, மோர் என வரிசையில் கும்பி நிறைந்தது!

சூடான சாதத்தில் இவையனைத்தும் ஐக்கியமாகி வயிறெனும் பானையை நிரப்பியது! மாங்காய் ஊறுகாய் வேறு ருசியாக இருந்தது!

கடைசியாக சீனி கொண்டாங்க என்றார் நமது நண்பர், வைத்திருந்த தயிரில் சர்க்கரை கலந்து அருமையான பண்டமாக்கித் தந்தார்! நெஞ்சும், வயிறும், கண்ணும் நிறைந்த உணவைத் தந்தருளிய சென்னை மாநகரிற்கு பெருநன்றி! 

வெளியே வருகையில், பருப்பு பொடி, ஊறுகாய் கிடைக்கும் என்றார்கள், வாங்கலாமா என்று மனைவியிடம் அனுமதி கேட்டால் சில உணவுகள் சாப்பிட நீங்கள் அந்தந்த இடத்துக்குத் தான் அழைத்து வரவேண்டும் என்று கட்டளை வந்தது! பதில் பேச முடியுமா???? கேள்வியை அனுபவஸ்தர்களுக்கே விட்டு விடுகிறேன்!


- கோமதி சங்கர் சுந்தரம்

Tuesday, November 26, 2024

சபரிமலையில் அரசியல் செய்யும் நீலம் கும்பல் - கமலிகணேசன்...




தொடர்ந்து இந்து வழிபாட்டை கேள்வி கேட்கும்  பிற்போக்குவாதிகள் கிறிஸ்தவ இசுலாமிய வழிபாடு என்று வந்துவிட்டால் பகுத்தறிவு வேலை செய்யாது. 

ஏனெனலில் இந்து வழிபாடு மட்டுமே மூடநம்பிக்கை என்று இவர்கள் பரப்புரை செய்வதற்கு பின் ஒரு அரசியல் உண்டு. 

வெங்கட்பிரபுவிடம் உதவியாளராக பணிபுரிந்த பா.ரஞ்சித் அட்டகத்தி திரைப்படம் மூலம் அறிமுகமாகி மெட்ராஸ் படத்திற்கு பிறகு புகழ் பெறுகிறார். இந்த புகழ் வெளிச்சத்தில் நீலம் என்கிற ஒரு பண்பாட்டு மையத்தை உருவாக்குகிறார்கள். 

இவர்களின் இந்துமத வெறுப்பு மார்கழியில் மக்களிசை என்ற பெயரில் தொடங்கி தற்போது இசைவாணியின் ஐ எம் சாரி ஐயப்பாவில் வந்து நிற்கிறது. 

மார்கழியில் இந்து மத மரபினரான சைவர் திருவெம்பாவை படிப்பதும், வைணவர்கள் திருப்பாவை படித்து நோன்புகளை கடைப்பிடிப்பது வழக்கம். அந்த மாதத்தில் தான் எந்த பண்பாட்டு தொடர்பும் இல்லாத மார்கழியில் மக்களிசை என்று இந்துமத எதிர்ப்பை காட்ட போட்டிக்கு இதை தொடங்கினர். 

அதன் தொடர்ச்சிதான் இங்கு வந்து நிற்கிறது.
இதற்குபின் உள்ள அரசியலை ஒவ்வொரு இந்துக்களும் உணர வேண்டும்.

இவர்கள் தங்களை பெளத்தர்கள் என்று அடையாளபடுத்தி கொள்கிறார்கள். ஆனால் பெளத்த குருமார்களின் வழி பெளத்த மரபை இவர்கள் கடைப்பிடித்து நாம் பார்த்ததில்லை. 
இவர்கள் இந்த முகமூடிகளுக்குள் ஒளிந்து இருக்கும் கிரிப்டோ கிறிஸ்தவர்கள் என்பதை நாம் உணர வேண்டும். 

இவர்களின் தொடர்ச்சியான பரப்புரை என்னவென்றால் இந்து மதத்தில் சாதி ஏற்றதாழ்வு உண்டு பெண்ணடிமைத்தனம் உண்டு என்று பரப்புவார்கள். இதில் கவனிக்க வேண்டிய விசயம் இது ஒரு குறிப்பிட்ட மக்களை குறிவைத்து நடக்கும். 

ஆனால் இந்து மதத்தில் சிலரின் சுயநலத்திற்காக அதுபோன்று நடத்தபட்டிருக்கலாம். ஆனால் வாழ்வியலை பொறுத்தவரை இங்கு அனைவருக்கும் சம மரியாதை வழங்குவதை தான் நோக்கமாக கொண்டுள்ளோம். சோழநாட்டில் திருவாரூர் கோவிலில் யானை ஏறும் பெரும்பறையர் எனும் நிகழ்வு சிறப்பாக இன்றும் கொண்டாடபடுகிறது. அந்த நிகழ்வில் யார் சாதி பார்க்கிறார்கள். இதுதான் நமது வாழ்வியல். அதன்பிறகு பெண்ணடிமைத்தனம் என்கிறார்கள் பெண்ணை வீரத்தின் அடையாளமாக போற்றக்கூடிய மரபு நமது மரபு.  கொற்றவை வழிபாடு தமிழர்களின் வாழ்வியலில் போர்தெய்வ வழிபாடாக உள்ளது. இதுதான் நமது மரபில் பெண்களின் நிலை! 

ஆனால் இதை எல்லாம் மறைத்து இவர்கள் சில இடங்களை தேர்ந்தெடுத்து பிரச்சனையை துவக்கி ஒருசாரரை இவர்களின் ஆதரவாக மாற்றி எடுப்பது தான் இவர்களின் நோக்கம்.
அப்படி இவர்களின் வலையில் சிக்குபவர்கள் வெகுவிரைவாக கிறிஸ்தவர்களாக மாற்றபடுவார்கள்.

இதுபோன்ற பரப்புரைக்கு பின் நடக்கும் விசயங்கள் இதுவெல்லாம். 

சபரிமலை கோவிலை பொறுத்தவரை சாஸ்தா வழிபாடு அதற்கென சில விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அது அந்த வழிபாட்டின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். நம்பிக்கையற்ற உங்களுக்கு அதில் என்ன பிரச்சனை? இல்லை அந்த விதிகளை மீறி செயல்படுவோம் என சொல்பவர்கள் முதலில் கிறிஸ்தவ இசுலாமிய விதிகளை மீறி புரட்சி செய்துவிட்டு வாருங்கள் அதன்பிறகு இதை பற்றி எல்லாம் பேசுவோம்.

இதுபோன்ற விதிகளும் கட்டுப்பாடுகளும் இந்து மதத்தில் மட்டுமே இருக்கிறது என்று கூறும் பரப்புரையே முதலில் அபத்தமானது.

இந்து மதம் என்ற பெயரில்  இங்கு பல்வேறு வழிபாட்டு நெறி உண்டு அவரவர் அவரவர் நெறியை அழகாக எந்த பிரச்சனையும் இல்லாமல் கடைபிடித்து தான் வருகின்றனர். 

ஆனால் இதுவெல்லாம் பிரச்சனையாக்குபவர்களின் அரசியலுக்கு பின் மிகப்பெரிய ஆயுதமாக சினிமா வெளிச்சமும் ஊடக அரசியலும் பக்கபலமாக இருக்கிறது. 

நமது உயரிய நாகரிகத்தையும் பண்பாட்டையும் சிதைத்து நம்மை அடிமைபடுத்துவதன்றி இதற்கு பின் வேறென்ன அரசியல் இருந்துவிட போகிறது.

இந்து மதத்தில் தாழ்ந்தவர் என்றோ உயர்ந்தவர் என்றோ யாரும் கிடையாது அப்படி எல்லாம் சிலர் கூற துவங்குகிற போதெல்லாம் சித்தர்களும் ஒளவையும் வைகுந்தர் வள்ளலார் போன்ற ஞானியர்கள் அதை கடுமையாக எதிர்த்தே வந்துள்ளனர். அதுவே இந்து மதம்.

நாம் இன்று மாபெரும் பண்பாட்டு புரட்சியை நோக்கி தள்ளப்படுகிறோம்...

- கமலிகணேசன்

Monday, November 18, 2024

சோற்றுக்கடைபுராணம் தொடர் - ft. சங்கர் ஸ்வீட்ஸ்

 தத்துவம் பேசும் சங்கர் அண்ணன் கடை


நெல்லையப்பர் ஆலயத்தின் சொக்கப்பனை மூக்கில் ஒரு தனி அடையாளம் எங்கள் சங்கர் அண்ணனின் சங்கர் ஸ்சுவீட்ஸ் கடை. அவாளை நாங்கள் சங்கர் அண்ணன் என்றாலும் அவர் பெயர் லெக்ஷ்மணன் என்பதாம்.

விபரம் தெரிந்த வயதில் இருந்தே நாம் செல்லும் எளிமையான பலகாரக்கடை. அண்ணன் கடையில் வாடிக்கையாளர் தமக்கு என்றைக்குமே ராஜ மரியாதை தான். சென்றவுடன் கையில் அப்போது தயார் செய்த பண்டம் ஒன்றே நாம் சுவைக்க இருக்கும்.

பழைய பண்டம் என்றுமே தருவதில்லை, சிறிய கடை, அதன் பின்னால் சிறு தயாரிப்பு கூடம்! சூடச்சூட பண்டங்கள் நம் வசம் அருமையாகத் தரும் அண்ணன் கரங்கள் தூய்மையானவை. 

உண்ணும் உணவோடு உணவருந்தவந்தோர் உணர உன்னதமான உணர்ச்சிவாக்கியங்களை உருவாக்கியருளும் உத்தமர் உறையும் உணவுப்பண்டசாலை.

அண்ணன் கடை தத்துவங்களுக்கு என் வட்டாரத்தில் நிரம்ப இரசிகர்கள் உண்டு. என் புலனச்சுவற்றில் அடிக்கடி அண்ணன் கடை தத்துவங்கள் மிளிரும்! நண்பர் சிவ.நடராஜும் நானும் சேர்ந்தால் இங்கு சுக்குக் காபி குடும்பத்தோடு அருந்துவோம், அருமை நண்பன் மீனாட்சி சங்கருக்கு நெய்க்கடலை, என் மகளுக்கு அண்ணன் கடை பூந்தி, இங்கு சூடச்சூட தயாராகும் அனைத்து பட்டங்களும் நமக்கு ப்ரியமே! அண்ணன் அல்வாவிற்கு அருமையான சுவையுண்டு!அதிலும் இங்குள்ள நெய்விளங்காய் என்றுமே நெஞ்சில் தனியிடம் அமர்ந்தது தான்.

சுக்குக் காபியில் என்ன சேர்க்கிறேன் என்று கையால் எழுதிய அட்டவணைகள் அண்ணன் கடையில் அளவுக்குறிப்போடு தொங்கும்!

என்று போனாலும் மகா டூரிஸ்ட் இட்டுச்செல்லும் புதுச் சுற்றுலா பட்டியல் இங்கு தொங்கும், மேலும் சில உள்ளூர் வணிகர்களது விளம்பரமும் இங்குண்டு. 

இவை அனைத்தையும் தாண்டி குணத்தில் தங்கமான அண்ணன் கடையில் என்று போனாலும் அன்று நம் நெஞ்சினிக்க செய்தி பலரை சிந்திக்கச் செய்யும் வண்ணம் சிலேட்டில் கையால் எழுதப்பட்டிருக்கும். நாளும் ஒரு சிந்தனை நவிலும் அண்ணன் கடையை நெல்லையில் மறவாதீர்.


- கோமதி சங்கர் சுந்தரம்

Wednesday, November 13, 2024

INDUS English




இராஜராஜ சோழன் சதய விழா சிறப்பிதழ்.
அருண்மொழி வர்மன் எனும் ராஜராஜ சோழன் காலம் சைவர்களின் பொற்காலம். திருமுறை கண்ட சோழன் எனும் பெருமைகொண்ட சிவபாத சேகரனின் சதயவிழா முன்னிட்டு நமது இண்டஸ் ஆங்கில இதழில் ராஜராஜ சோழன் குறித்த வரலாற்று சிறப்பு கட்டுரைகள் வெளிவந்துள்ளது.

படித்துவிட்டு தங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் பதிவு செய்க...

சிவசக்தியின் திருவருளால் ...

INDUS இதழ் : Download Pdf

சோற்றுக்கடைபுராணம் தொடர் - ft. சத்யா டீ ஸ்டால்

  ஒரு டீக்கடை சோற்றுக்கடை ஆகுமா? புராணத்தில் இடம் பெறுமளவிற்கு என்ன சிறப்பு? சேரன்மகாதேவியில் பாபநாசம் சாலையில் அமைந்துள்ள ஒரு கீற்றுக் கொட...